புதன், மார்ச் 31, 2010

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் போதனைகள்

1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது.


2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.

3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள், தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.

4. "என் செயலாவது யாதென்று மில்லை" என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.

5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல் ‘நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன்‘ என்னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இதுதான் பக்தி யோகம் எனப்படும்.

6. இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததனால், இறைவனே இல்லை என்று சாதிக்காதே!

7. பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.

8. முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் நுழைந்தால் உனக்கு மனச் சஞ்சலமே இராது.

9. எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது, அது போல், இறைவனில்லாமல் போனால் மனிதன் உயிர் வாழ முடியாது.

10. வேக வைத்த நெல்லை, பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது; வேக வைக்காத நெல் தான் முளை விடும். அதுபோல உண்மை ஞானமாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.

11. நெருப்புக்கும், அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்குமுள்ள தொடர்பு.

12. தசைத் தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை, பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.

13. இறைவனது சன்னிதானத்தில் தர்க்க புத்தி, படிப்பு இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும். குருடு காணும். செவிடு கேட்கும்.

14. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான். இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.

15. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.

16. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.

17. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது. யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை அறிவாய்.

18. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.

19. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை. அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.

20. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர் காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.


என்றும் அன்புடன்

திங்கள், மார்ச் 29, 2010

முதல் விருது!

வலை உலக வித்தகர்களே/நண்பர்களே!
வலை பூ ஆரமித்த போது,நாம் எண்ண எழுதபோகிறோம் யார்
நம்மை பின் தொடருவார்கள் என்றெல்லாம் எண்ணினேன்.ஆனால்அன்று முதல் நான் எழுதும் ஒவ்வரு பதிவுற்கும்.தவறாது பின்னுட்டம் அளித்து என்னை மென்மேலும் உற்சகாபடுத்தி, அதோடு அல்லாமல் இன்று அவருக்கு கிடைத்த விருதுவினையும் என்னோடு பகிர்ந்து(எனக்களித்து) இருக்கிறார்.

இது நான் பெற்ற முதல் விருது

இவ்விருதை தந்த தோழி திவ்யாஹரிக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்!நன்றிகள்!நன்றிகள்!நன்றிகள்!




என்றும் அன்புடன்

வியாழன், மார்ச் 25, 2010

தேவார பாடல் - 2



நரம்பு தளர்ச்சி, வலிப்பு, வாதம், இரத்த அழுத்தம், நீரிழவு நோய் நீங்குவதற்கும், மயக்கத்திலிருந்து எழுவதற்கும், போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கும் ஓதவேண்டிய பதிகம்.

பாடியவர்: திருஞானசம்பந்தர்

தலம்: திருப்பாச்சிலாச்சிரமம்

துணிவளர் திங்கள் துளங்கி விளங்க
சுடர்ச்சுடை சுற்றி முடித்து,
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ,
ஆரிடமும் பலி தேர்வர்;
அணிவளர் கோலம் எலாம் செய்து,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ, மங்கையை வாட
மயல் செய்வதோ, இவர்மாண்பே?

கலைபுனை மானஉரி தோல்உடை ஆடை,
கனல் சுடரால் இவர்கண்கள்,
தலைஅணி சென்னியர், தார்அணி மார்பர்,
தம்அடிகள் இவர் என்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்து அமர்
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ, ஏழையை வாட,
இடர்செய்வதோ, இவர் ஈடே?

வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சுஇருள்;
மாலை வேண்டுவர், பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு
இடமாக நண்ணுவர், நம்மை நயந்து
மஞ்ச அடைமாளிகை, சூழ்தரு
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி
வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?

கன மலர்க் கொன்றை அலங்கல்
இலங்க கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்து, அழகு
ஆய புனிதர் கொல்ஆம், இவர் என்ன,
அனம் மலி வண்பொழில் சூழ்தரு
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ மங்கையை
வாட மயல் செய்வதோ, இவர் மாண்பே?

மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து
ஆடி வளர் சடைமேல் புனல்வைத்து
மோந்தை, முழா, குழல், தாளம் ஓர்
வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி,
ஆந்தை விழிச் சிறு பூதத்தர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச்
சதுர் செய்வதோ, இவர் சார்வே?

நீறு மெய் பூசி, நிறை சடை தாழ,
நெற்றிக் கண்ணால் உற்றுநோக்கி
ஆறு அது சூடி, ஆடு அரவு ஆட்டி,
ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர், பூதத்தர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
ஏறுஅது ஏறியர், ஏழையை வாட,
இடர் செய்வதோ இவர்ஈடே?

பொங்கு இள நாகம், ஏர் ஏகவடத்தோடு
ஆமை வெண்நூல், புனைகொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய,
குழகர் கொல் ஆம், இவர் என்ன
அங்கு இள மங்கை ஓர் பங்கினர்;
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
சங்குஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச்
சதிர் செய்வதோ இவர்சார்வே?

ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து,
இராவணன் தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய், நடு ஆய
மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் தொழில்
பாச்சலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச்
சிதை செய்வதோ, இவர் சேர்வே?

மேலது நான்முகன் எய்தியது இல்லை;
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை;
என இவர் நின்றதும் அல்லால்
ஆல்அது மாமதி தோய்பொழில்
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
பால்அது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வதோ, இவர் பண்பே?


நாணொடு கூடிய சாயினரோனும் நகுவர்,
அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள்
அவை கொள வேண்டா;
ஆணோடு பெண்வடிவு ஆயினர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ, பூங்கொடி வாடப்
புனை செய்வதோ, இவர் பொற்பே?

அகம்மலி அன்போடு தொண்டர் வணங்க,
ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்த, அழகு ஆய
புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகைமலி தண் பொழில் சூழ்தரு
காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவை
ஏத்த, சாரகிலா வினைதானே.


திருச்சிற்றம்பலம்


என்றும் அன்புடன்

புதன், மார்ச் 24, 2010

மனம் விட்டு பேசுங்கள்

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன.

மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.


என்றும் அன்புடன்

செவ்வாய், மார்ச் 23, 2010

தேவார பாடல்-1



 தொடங்கும் பணிகள் சிறப்பாக அமையவும்,
கடன் நீங்கி, அமைதியுடன் வாழவும், கடன் வாங்காமல்
வாழ்க்கையை நடத்தவும் ஓத வேண்டிய பதிகம்.


பாடியவர்: திருஞானசம்பந்தர்

தலம்: மதுரை

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே?
பாதி மாதுடன் ஆய பரமனே.
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாது செயத் திருவுள்ளமே?
கைதிகழ் தரு மாமணி கண்டனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

மறை வழக்கம் இலாத மாபாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திருவுள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே?
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே.
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாது செயத் திருவுள்ளமே?
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே.
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல, வாது செயத் திருவுள்ளமே?
தழல் இலங்கு திருவுருச் சைவனே.
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாது செயத் திருவுள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே?

மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்
கோலம் மேனியது ஆகிய குன்றமே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப்
பாடல் வல்லவர், பாக்கிய வாளரே.

:திருச்சிற்றம்பலம்//


 என்றும் அன்புடன

ஞாயிறு, மார்ச் 21, 2010

"கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்'

வாழ்கையில் பலவிதமான் கஷ்டங்கள் பிற்காலத்தில் வரமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.


இளமையில் கஷ்டப்படவேண்டும்,அதுமட்டுமல்ல இனம்புரியாத எதிர்பாரத கஷ்டங்கள் வராமல் இருக்க திட்டமிட்ட கஷ்டங்கள் படலாமே.காலை நான்கு மணிக்கே எழுவது கஷ்டம் ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல்,குடிஇருக்க விடு இல்லாமல் கஷ்டபடாமல் இருக்க படுக்கையை விட்டு நான்கு மணிக்கே எழலாமே, உடலில் முகுகு வலி, மூட்டு வலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்ற ஒழுங்கான கஷ்டம் படலாமே.

பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் படாமல் இருக்க சமையல் என்கின்ற கஷ்டபடலாமே.

ஒழுங்கற்ற எதிர்பாரத கஷ்டத்தை தவிர்க்க திட்டமிட்ட
கஷ்டங்கள் படுவது நல்லதே.

பிள்ளை பேறு கூட கஷ்டம் தான்,தாய் அதை படாமல் இருந்தால் நாம் வந்தே இருக்க முடியாது. ஆனால் இளைய தலைமுறை ஜாலியாக இருக்கவே விரும்புகிறது. கஷ்டமே இருக்க கூடாது என்று கனவு காண்கிறது.சின்ன வண்டு ஒன்று கூட்டில் இருந்து வெளியேறும் போது அவஸ்தையுடன் தான் பயணத்தை ஆரமிக்கிறது.இதை மாணவர்க்கு உணர்த்த ஆசிரியர் ஒரு வழி செய்தார் கூட்டில் இருந்து அது வெளிவரும் துயரத்தை பார்க்கட்டும் என்று மாணவர்கள் மத்தியில் விட்டுவிட்டு வெளியே போனார்.,அதன வேதனையை கண்ட ஒரு மாணவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்து கொண்டு அது வெளியேறும் ஓட்டையை பெரிதுபடிதினான்.அது சுலபமாக வெளியே வந்து விட்டது,மாணவன் மகிழ்ந்தான்,ஆனால் வண்டு மகிழவில்லை.வெளியே வந்ததும் அதனால் பறக்க முடியவில்லை. ஏன்?..

அதன சிறகுகளை அசைக்க கூட முடியவில்லை,செய்தி அறிந்ததும் அதன காரணம் கண்டுபிடித்தார்.கூட்டில் இருந்து சிறிய துளை வழியாக வெளியேற சிரமபடும்போது தான் அது தன் சிறகுகளை அசைத்து அசைத்து பழகுகிறது.அதற்கு வாய்ப்பே இல்லாததால் சிறகுகளை அசைக்க அதற்கு தெரியவே இல்லை.

சிரமங்கள் நம்மை பலபடுதுகின்றன.கஷ்டங்கள் நம்மை வலுபடுத்துகின்றன துயரங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன.எதிர்பாரத சிரமங்களை தவிர்க்க எதிபார்க்கும் சிரமங்களை ஏற்று கொள்ளுங்கள் ஆகவே,

 "கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள்'

 வெற்றி நிச்சயம்...


....சுகிசிவம்/

என்றும் அன்புடன்

வியாழன், மார்ச் 18, 2010

கண்ணதாசன் கவிதை




பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கவியரசு கண்ணதாசன்

புதன், மார்ச் 17, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்



 நியூயார்க் நகரத்தின் சுரங்கபாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஞாயிற்றுகிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகியது. சிலர் கண்களை முடியும்,பலர் பத்திரிகைகளை படித்த படியும் அமர்திருன்தனர்.அப்போது அங்கே ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் வந்து அந்த பிரபல எழுத்தாளர் அருகே வந்து கண்களை மூடி அமர்ந்தார்.குழந்தைகள் இருவரும் ஆறு வயதை தண்டாதவர்கள்,அவர்கள் விளையாட ஆரமித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு இருந்த அமைதி காணாமல் போயிற்று.
குழந்தைகள் சத்தம் போட்டு விளையாடிய் கொண்டனர்,பிறகு சண்டை போட்டு கொண்டு ஒருவர் மீது ஒருவர் பொருட்களை வீசி கொள்ள அரமித்தனர்,அவர்கள் தந்தையோ அவர்களை கண்டிபதாக தெரியவில்லை,அவரோ கண்களை திறபதாக தெரியவில்லை.

அங்கு இருந்த அனைவரும் அவரை எரிச்சலாக பார்ப்பதை அவர் உணரவில்லை,அருகில் இருந்த எழுத்தாளர்ரோ பொறுமை பற்றி நெறய எழுதி குவித்தவர் பொருத்து,.பொருத்து பார்த்த அவர்ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன் அருகே அமர்ந்து இருந்த குழந்தைகளின் தந்தையிடம் சொன்னார் உங்கள் குழந்தைகள் மற்றவர்களை தொந்தரவு செய்கிறார்கள் அவர்களை கட்டுபடுதுன்கலேன் என்றார்.

அந்த நபர் மெல்ல கண்களை திறந்து ஆமாம் ஏதாவது செய்ய வேண்டும்,ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் அவர்கள் தாய் இறந்துவிட்டாள், ஆஸ்பித்திரியில் அவளது உடலை தர இன்னும் ஒரு மணி நேரமாகும் அதனால் தான் இங்கு வந்தேன் இதை எப்படி அவர்களிடம் சொல்லுவது என்று எண்ணி கொண்டு இருக்கிறேன் மன்னித்து விடுங்கள் என்றார்.

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும்,அவருடைய குழந்தைகள் மீதும் கொண்ட கோபம் மறைந்து அவர்கள் மேல் பரிவும்,பச்சோதாபமும் பிறந்தது,ஏதவாது உதவி வேணுமா என்றும் அவரிடம் கேட்டார்.

அந்த எழுத்தாளர் "செயல் திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்" என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய ஸ்டீபென் ஆர்.கோவே.

இந்த நிகழ்சியில் அந்த சிறுவர்கள் செயல் மாறவில்லை,அங்கே மீண்டும் அமைதி திரும்பவில்லை.ஆனால் அந்த குழந்தைகளும்,அந்த தகப்பனும் இருக்கும் சூழ்நிலை தெரிந்த உடன் அவர் மனநிலை மாறிவிட்டது.

நமக்கு தவறாக தோன்றும் பல செயல்களுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.சில நம்மால் ஏற்று கொள்ள கூடியதாகவும்,சில ஏற்று கொள்ள முடியாதாகவும் இருக்கலாம்,ஆனால் அந்த காரண காரியம்அறியும் போது புரிந்து கொள்ளுதல் சாத்தியமாகிறது,
மன்னித்தல் எளிதாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்வதற்கு
மனிதன் எந்திரமல்ல,
எந்திரம் கூட சில நேரங்களில் பழுதாகும் போது,
சில நேரங்களில் சில மனிதர்கள் நாம் எதிர்பார்பதற்கு மாறாக நடந்து கொள்வது அதிசியமல்ல. அந்த நேரத்தில் ஏதவாது காரணம் இருக்கும் என்று நாம் கோபபடாமல் சிந்தனை செய்தால் அதை பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்


(இது என் நண்பர் எனக்கு மின்அஞ்சலில்
எனக்கு அனுப்பியதை மாற்றி எழுதி இருக்கிறேன்)

செவ்வாய், மார்ச் 16, 2010

நீதிமன்றத்தில் நித்தியானந்தா (ஒரு கற்பனை)


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..


கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..


நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..


குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்..


ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை. அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக.... நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலத்திலே பொது நலமும் கலந்து இருக்குறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..


நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..


கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..


இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???


தமிழ்நாட்டில் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,


ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...


என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலே உதைக்க தோன்றும் பெயர். ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.


ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம், நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...

மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தார்கள்.... ஓடினேன்


நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்......


ஓடினேன் ஓடினேன்.... கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்


ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...


எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.


என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.



செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பி கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??


இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

திங்கள், மார்ச் 15, 2010

ஒரு வழியா.......... வாங்கிவிட்டேன்!

அப்பாட நானும் ஒரு வழியா வாங்கிவிட்டேன்.இங்கே(துபாய்) வந்த முதல் நாள் முதல் இது என் கனவு எப்படியாது வாங்கிவிடவேண்டும் என்று, வந்த உடனேயும் வாங்க முடியாது ஏன்ன? என்னடா இப்போ தான் வந்தான்,அதுகுள்ளே வாங்கிட்டன்,இவனுக்கெல்லாம் குடும்ப பொருப்பே கிடையாது அப்படி பழி வந்து விடக்கூடாது,அதன்னாலே முதல் வருஷம் என்னோட இந்த ஆசையை கொஞ்சம் தள்ளி வைத்தேன், சரி வருகிற வருஷம்(2008)எப்படியாவது வாங்கி விடலாம்,எப்படியும் போனஸ் கிடைக்கும் அதுல வங்கி விடலாம் என்ற என் கனவுல மண்ணு, உலக பொருளாதார நெருக்கடி! அதனால ஆபீஸ்ல நோ போனஸ், இனி மேல் இங்கே யாரும் வேலை பார்க்க முடியாது அப்படின்னு ஒரே பேச்சு என்னடா செய்ய நம்ம ஆசை அதை வாங்காமலே ஊருக்கு போய்விடுவோமோ என்றெல்லாம் ஒரே பயம்.சரி கொஞ்சம் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து வாங்கலாம் அப்படின்னு நினைக்கும் போது வீட்டுல இருந்து போன் எப்பா, நல்ல வரன் வந்து இருக்குடா தங்கச்சிக்கு அதனாலே நீ ஊருக்கு (2009) வரும் போது நகை வாங்கிட்டு வந்துடு,அப்படின்னு அப்பா,அம்மா கிட்ட இருந்து போன், சரி தங்கச்சி கல்யாணம் நல்ல படியா முடியட்டும் அப்புறம் வாங்கி கொள்ளலாம்.அப்படினு தோனுச்சி!இதுல வேற வாரம் தோறும் பீர்,டூர் அப்படின்னு செலவு செய்த கிரெடிட் கார்டு பில் கழுத்த பிடிக்க நெலமை ரொம்ப மோசம் ஆகிவிட்டது.அத்தான்வந்து கிரடிட் கார்டு பில் எல்லாம் செட்டில் செய்ததும் கொஞ்சம் நிம்மதி,ஆனா மாதம்தோறும் எனக்கு அந்த பணத்தை செட்டில் செய்ய வேண்டும் அப்படின்னு ஒரு ஆர்டர்,ஒரு கட்டத்துல நம்மாலே வாங்க முடியாதோ அப்படி தோனுச்சி,சரி இரண்டு வருடம் தான் வாங்க முடியல வருகிற (2010)வருஷம்மாவது நமக்கு நல்லா இருக்கட்டும் அப்பவாது எப்படியாச்சு இதை வாங்கி விடுவோம்,அப்படி மனசை தேத்திகொண்டேன்,ஆனா அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆசை,ஒரு வழியா அத்தான்கிட்ட பேசி இந்த மாதம் மட்டும் நான் உங்க செட்டில்மென்ட் பணத்தை கொண்டு அதை வாங்க போகிறேன் அப்படின்னு சொல்ல,அவரும் சரி வங்கிகொள் என்றார்.ஒரு வழியா வாங்க முடிவு பண்ணி ஆச்சு,எதை வாங்க அப்படினு
குழப்பம்,வாங்குறது நல்லதா வாங்கு,பணத்தை வேஸ்ட் பண்ணாதே.அப்படின்னு அக்கா அட்வைஸ் வேறே!
சரி கடைக்கு போவோம் அப்படி நண்பர்களோடு கிளம்பியாச்சு,அங்கே போன சார் இது தான் லேட்டஸ்ட்,இது நல்லா இருக்கும் அப்படின்னு கடைக்காரன் வேற குழப்ப,ஒரு வழியா முடிவு பண்ணி எடுத்தாச்சு என்னமோ எதையோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங்,இல்லையா பின்ன என்னோட மூன்று வருட கனவு ஆச்சே.....




(ஆமாங்க ஒரு வழியா போனவாரம் வியாழகிழமை
மடிகணினி (LAPTOP) வாங்கி விட்டேன்)

செவ்வாய், மார்ச் 09, 2010

"பதின்மம்" நினைத்து பார்த்தால்..........

என்னையும் (நம்பி) ஒரு பதிவரா
நினைத்து இந்த தொடரை எழுத அழைத்த
தோழி "திவ்யா ஹரி" க்கு முதலில் நன்றி

(முன்பே எழுத வேண்டியது ஆனால்
நேரம்மின்மையால் இப்பொழுது எழுதிஇருக்கிறேன்)




முதலில்

நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தபோது,எங்கள்
வகுப்பில் நாங்க ஒரு குரூப்(மாப்ளை பெஞ்சு தான்).எங்கள் நண்பரில் ஒருவர் கொஞ்சம் கருப்பு(அதுகாக நான் ஒன்னும் அரவிந்த்சாமி கலர் கிடையாது நானும் கருப்பு தான்,அவர் இன்னும் கொஞ்சம் கூடுதல்).அப்ப நான் எல்லாரையும் கொஞ்சம் கூடுதலாகவே ஓட்டும் (கிண்டல்௦) பழக்கம் உண்டு.ஒரு முறை அந்த நண்பரை அனுமந்தராவ் அப்படின்னு கிண்டல் பண்ண,சாதாரண சண்டை முற்றி கைகலப்பு வரை போகிவிட்டது. நாளடைவில் அது சரியாகி போய் விடும் என்று என் நண்பர்களும் நினைத்தனர்,ஆனால் அது பெரிதாகி (இந்தியா/பாகிஸ்தான் ரேஞ்சுக்கு) வளர்ந்துவிட்டது.அன்றிலிருந்து பல நாட்களுக்கு, ஏன்.. பல வருடங்களுக்கு அவன் என்னிடம் சரியாகப் பேசவில்லை. பின் நான் பாலிடெக்னிக் படித்து கொண்டு இருக்கும் போதும் ஒரு நாள் எங்கள் (குரூப்) நண்பன் ஒருவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பள்ளி நினைவுகளை அசைபோட்டம் ,அந்த நண்பர் பெயரும் வந்த போது தான், ச்சே.. ஒரு சின்னப் கிண்டல் ஆசையால் ஒரு நல்ல நட்பை இழந்தோமே’ என்று நான் என்னையே கேவலமாக நினைத்துக் கொள்வதுண்டு.அன்று முதல் இன்று வரை நான் எவரையும் அவர்கள் மனது புண்படும்படி பேசுவதில்லை ,இன்றைக்கும் பலரோடு எனக்கு சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. அந்த ஒரு சம்பவம் எனக்குத் தந்த பாடத்தால்... பேசாமலே போய்விடுவேன். தவறு என்மீதாயினும், என் மீது இல்லாவிட்டாலும்.அப்படியே எதாவதுபேசினாலும் உடனே மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.இது அந்த நண்பனுக்கு மானசிகமாக
நான் செய்யும் மரியாதை.

இரண்டாவது:

எங்கள் தெருவில் உள்ள தாணு அண்ணா மீது எப்போதும் எனக்கு ஒரு மரியாதை உண்டு.யார் மீது அதிர்ந்து பேசாதவர்,ஒரு முறை அவர் பிறந்த நாளுக்கு என்னை ஓரிடத்துக்கு அழைத்து சென்றார்,அது ஆதரவற்றவர்கள் முகாம்,நான் அவரிடம் கேட்டேன்,நாமே ஏன்ன இங்கே வந்து இருக்கிறோம் என்று,அவர் தன்னுடைய ஓவவரு பிறந்த நாளுக்கும் இங்கு வந்து தன்னால் முடிந்த உதவியை செய்வதோடு மட்டுமல்லாது அன்றைய மதிய உணவை அவர்களுடன் சேர்ந்து தான் சாப்பிடுவராம்,நீயும் இது போல் செய் என்றார்,அன்று முதல் நானும் எனது ஒவ்வரு பிறந்த நாளுக்கும் (பிறந்த நாளுக்கு மட்டுமல்ல என்னால் எபோதேல்லாம் முடிகிறதோ)அது மாதிரியே செய்து வருகிறேன் நான் என் வாழ்கையில் செய்த முதல் நல்ல காரியம் இதுதான்.இப்போ இங்கே(துபாய்) வந்த இந்த மூன்று வருடமாக என் பிறந்த நாளுக்கு செல்ல முடியவில்லை,ஆனால் ஊருக்கு(VACATION)வரும் போதும் தவறாமல் ஒரு நாள் அங்கு சென்றுவிடுகிறேன்.


(நீங்களும் இதை செய்யலாமே)

(நிறைய எழுதலாம் ஆனால் பதிவு பெரிதாகி விடும்
என்பதால் எந்த இரண்டு மட்டும்)

அனேகமாக எல்லாரும் இதை எழுதி இருப்பார்கள்
என்பதால் யாரையும் அழைக்கவில்லை.

யாராவது நண்பர்கள் இந்த தொடரை தொடர நினைத்தால்
அவர்களும் தொடரலாம்..

ஞாயிறு, மார்ச் 07, 2010

பிள்ளையின் ஏக்கம்!

எனக்கு ஆட்டோ வரும் முன்பே
உனக்கு பேருந்து வந்து விடுகிறேதே!
அம்மா
ஒவ்வரு நாளும்!

பள்ளி விட்டு திரும்புகையில்,
யாருமே இல்லாத வீட்டை பார்கையில்!
எதுவுமே இல்லாததுபோல்
தோன்றுகிறது எனக்கு!

இரவு ஒன்பது மணிக்குள் வந்துவிடும் உன்னையும்,
பதினோரு மணிக்குள் வந்து விட முயற்சிக்கும் அப்பாவையும்
பள்ளிகூடத்தில் நினைக்கையில்
மங்கலாய் வந்து போகிறது
நினைவில்!

வரவேற்பறைகளை அலங்கரிக்க
தெரிந்த உனக்கு,
உன் ஸ்பரிசத்துக்காக ஏங்கும்
என்னை ஏனம்மா புரிந்து
கொள்ளஇயலவில்லை!

வீட்டு வேலைகளை ஞாயிற்றுகிழமைகளில்
தள்ளிபோடும் உன்னை போலவே
என் ஏக்கங்களை நானும்
தள்ளி போட பழகிகொண்டேன்.

அன்பான வார்த்தைகளால்
தற்காலிக தாய் ஆகிவிடுகிறாள் வேலைக்கார ஆயா,
அப்பொழுதெல்லாம் தோன்றுகிறது எனக்கு
அவளுக்கே பிள்ளை ஆகிஇருக்கலாம் என்று.

உன்பிள்ளை என உணர்த்த
நான் நன்றாக படிப்பதாக மார்ர்தட்டுகிறாய்!
என் அம்மாவென உணர்த்த
நீ என்ன செய்யபோகிறாய்!

திங்கள், மார்ச் 01, 2010

முதல் வேலை..............

என்ன வேலை இது
எனக்கு பிடித்தவாறு உடையனிய மறுக்கும்
வேலை!!!

என் தாய்மொழி
என் நாவில் எட்டிபார்க்க கூட தடைபோடும்
வேலை!!!

போலியான புன்னகையை என்
முகத்தில் எப்போதும் ஒட்டிவிட்ட
வேலை!!!

சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்த வேண்டும் என்ற
என் கனவைஎல்லாம் கம்ப்யூட்டர் லில்
கட்டி போட்ட வேலை!!!

தாய்நாட்டில் கற்றதையும் பெற்றதையும்
டாலருக்கு அடகு வைத்த
வேலை!!!

குவியலாக இருகிப்போன
இந்த கனவையெல்லாம்
சுக்குனுறாய் சிதறடித்து விட்டது
இரு துளி கண்ணீர்!!

ரொம்ப சந்தோசமாக இருக்குடா"
முதல் மாத சம்பளத்தை நீட்ட
என் தாயின் கண்ணில் தோன்றிய
ஒரு துளி கண்ணீர்!!!!

ரொம்ப கஷ்டமாக இருக்குடா
வெகு நாளாக வேலை தேடும்
நண்பனின் கண்ணில் தோன்றிய
மற்றொரு துளி கண்ணீர்!!!!