திங்கள், டிசம்பர் 12, 2011

தலைவர் பிறந்த நாள் , என் முதலாண்டு திருமண நாள்


தன்னடக்கத்தின் தலைமகனே உன்னை வாழ்த்த வயது இல்லை என்பதால் உன்னை வணங்குகிறேன் . பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா,,,,,,,,,,,,,

1st Anniversary

சென்ற வருடம் (12-12-2010) இதே நாளில் என்னை கரம் பிடித்து,என் சுக, துக்கங்களில் பங்கு கொண்டு என்னை அன்போடும்,அனுசரணையோடும் பார்த்து கொண்டு இருக்கின்ற என் அன்பு மனைவிக்கு

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .





ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஊருக்கு வருகின்றேன்

வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்....






கடந்த இரு மாதம் வேலை பளு ஜாஸ்தி.அதனால் தான் வலை பக்கமே வர இயலவில்லை (அப்படியே வந்தா மட்டும் எழுதி கிழிச்சுருவே அப்படின்னு நீங்க சொல்லுறது கேட்குது) இன்று நான் தாயகம் வருகின்றேன், தம்பி கல்யாணம், மனைவி சீமந்தம் அப்படின்னு வீட்டு விசேசம் நெறய இருக்கு.எல்லாம் முடிச்சு திரும்ப டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி உங்க எல்லோரையும் மறுபடியும் வலைபக்கம்
முலமாக சந்திகின்றேன்

நன்றி

என்றும் அன்புடன்

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

பாவி பயலுக



ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்


அங்க இருந்த துறவி சொன்னாரு . தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா ? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு . உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான் . அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் . ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல . உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான் . மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்ததுக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்

உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார் . இவனும் வந்துட்டான்

அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது . அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது . இவனும் மறு நாள் காரணம் கேட்டான் . ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்

மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான் . அவர் அப்பவும் மறுத்தார் . உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு . ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க . ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான் . வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார் . இவனும் பண்ணினான்

ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .

உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி . அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார் . இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார் . இவன் தொறந்தான் . அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி . ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான்
அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் .

.

.

அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.
( பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க )



என்றும் அன்புடன்

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் ரகசியங்கள்


இது என் நண்பர் எனக்கு மினஞ்சலில் அனுப்பியது..........


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன..அவைகளில் சில...





1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்பு ஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ..ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்

26. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

27. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

28. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.



என்றும் அன்புடன்

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

எனக்கு பிடித்த கமல்

கமல்ஹாசனின் திரை பயணத்தில்
எனக்கு பிடித்த எட்டு படங்கள்-2





மைக்கேல் மதன காமராஜன்

முழுக்க முழுக்க நகைசுவையை மையமாக கொண்டு
எடுக்கப்பட்ட படம்.இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில்
(திருடன்,தொழிலதிபர்,சமையல்காரன் மற்றும் தீயணைப்புவீரர்)நடித்திருப்பார்.இந்த நான்கு வேடத்திலும் நான்கு விதமான
பாடி லாங்குவேஜு உடன் கமல் செய்து இருப்பது தான்
படத்தின் சிறப்பே.கிரேசி மோகன் வசனம் படத்துக்கு கூடுதல் பலம்

இந்தியன்


இன்னொரு சுதந்திரத்துக்குப் போராடும் வீரனாக…
லஞ்சத்துக்குக் கொள்ளிபோடத் துணிந்த வயோதிக தியாகியாக.. , தடுமாறாத உறுதியும் கொண்ட தாத்தாவாக நடித்துஇந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை கமல் கட்டிக்கொண்ட படமிது.படத்துக்கு வசனம் அமரர் சுஜாதா, படத்தில் இந்த ஒரு வசனம் இவரின் பெருமையை சொல்லும் "'பக்கத்துல இருக்கிற குட்டி குட்டி நாடெல்லாம் எங்கேயோ போயிடுச்சி.ஆனா இந்தியா இன்னும் அப்படியே இருக்கு..ஏன்?ஏன்னா அங்கெல்லாம் கடமையை மீறுவதற்குதான் லஞ்சம். இங்க மட்டும்தான் கடமையைச் செய்வதற்கே லஞ்சம்…” ன்று எழுதியிருப்பார். தமிழ் திரையுலம் இழந்த மாபெரும் சொத்து சுஜாதா அவர்கள்,1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது

தேவர் மகன்


இரு குடும்பத்து பங்காளி சண்டை கதை.சிவாஜி கமலின் நடிப்பைவிட இன்னொருவர் நடிப்பு மிக பிரமாதமாய் இருக்கும் அவர் நாசர்.நிறைய பேருக்கு போபம் வரலாம், ஆனால் அதுதான் உண்மை"வாடா என் தேவன் மகனே" என சொல்வதாகட்டும், மூக்கோடு மூக்கு ஒட்டி நிற்கும் அந்த 'தூங்கிக்கிட்ட இருக்கிற மிருகத்தை தட்டி எழுப்புற" சீனாகட்டும்" நாசர் கலக்கி இருப்பார். மாயன் நாசர் இல்லாமல் இந்த படத்தை ரசிக்கவே மனம் இருக்காது.படத்துக்கு படம் ஏதவாது புதுமையை புகுத்தும் கமல்,
இந்த படத்தில் பெரிய மீசையுடன் வேஷ்டி சட்டையில் ஒரு அக்மார்க் கிராமத்தான் ஆகவே வாழ்ந்து இருப்பர்,பரதன் இயகத்தில் இசைஞானி இசை அமைத்த மெகா ஹிட் திரைப்படம்.

புன்னகை மன்னன்

கமல் இரு வேடம் ஏற்ற படம் என்றால் ஒரு வேடம் மிகவும் பிரமாதமாய் பேசப்படும், (ஒரு வேடத்தை அவரே கெடுத்து கொள்வர் அது வேறு கதை ) ஆனால் இந்த படம் அதருக்கு விதி விலக்கு..காதலில் தோல்வியுற்ற நடன கலைஞர் ஆகவும், சார்லி சாப்ளின் ஆகவும் ஏற்ற இரு வேடமும் கனமான் வேடம், அதன் தன்மை உணர்ந்து கமல் தன் நடிப்பை வெளிபடுத்திய அருமையான படம்.இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை ரகம்.

செவ்வாய், ஜூலை 26, 2011

எனக்கு பிடித்த கமல் படங்கள்

கமல்ஹாசனின் திரை பயணத்தில்
எனக்கு பிடித்த எட்டு படங்கள்-1

மூன்று தேசிய விருதுகளைப் (மூன்றாம் பிறை (1982),நாயகன் (1987) மற்றும் இந்தியன்(1996) பெற்ற நடிகர்.சிவாஜிக்கு பிறகு என்று இல்லாமல் இருக்கும் போதே அவரை விட அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய நடிகன்.ஒரு ரஜினி ரசிகனாய் நான் ரசித்த என்றும் ரசித்து கொண்டு இருக்கின்ற நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களை பற்றி தான் இந்த பதிவு,அவர் இது வரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருந்தாலும் எனக்கு என்னோவோ அவரின் திரைபயணத்தில் இந்த எட்டு படங்கள் மட்டுமே பிடிகின்றது.இந்த எட்டு படத்திலும்,எட்டுவித்தியாசமான நடிப்பால் மிரட்டுவார் ஆனால்
ஏதோ இவர் மட்டுமே தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார் என்ற பல அறிவு ஜீவிகளின் கருத்து காமடியே.கமல்ஹாசனை பொறுத்த வரையில் பல ஹாலிவுட் படங்களை அப்படியே காபி
செய்துதான் தன் படத்தில்பயன்படுத்துகிறார் என்ற குற்றசாட்டு உண்டு பல படங்களில் அது உண்மையும் கூட,ஆனால் அவர் அந்த படங்களை அப்படியே காப்பி செய்யாமல் நம் மக்களுக்கும் ஏற்றவாறு சற்று மாற்றுவது உண்டு.வேப்பம் பூ கசந்தாலும் அதனில் உள்ள தேன் இனிப்பது போல இவரின் திறமை நம்மை மெய் மறக்க செய்வது யாராலும் மறுக்க முடியாத உண்மை தான். இனி எனக்கு பிடித்த அந்த அதியிசங்கள்....

நாயகன்


இந்த படத்தை இது வரை நான் எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்றே தெரியாது, அந்த அளவுக்கு எனக்கு பிடித்த படம். கமல்ஹாசனின் திரை பயணத்தை இரு வகையாக பிரிக்கலாம் என்றே சொல்லுவேன்.நாயகனுக்கு முன்பு, பின்பு என்று .நாயகனுக்கு பின்புதான் இவர் தன் கலை பயணத்தையே மாற்றி அமைத்தார்.இந்த படத்தில் இவர் ஏற்ற வேலு நாயகர் என்ற பாத்திரமாகவே வாழ்ந்து இருப்பர்,இதில் சிறுவன் முதல் அறுபது வயது கிழவன் வரை ஒவ்வரு கால கட்டத்தில்லும் கமல் நடிப்பு இன்று வரை எந்த நடிகரும் செய்ய இயலாத ஒன்று .பாலகுமாரனின் வசனத்தில், மணிரத்னம் திரைக்கதை அமைத்து எடுத்த ஒரு வெள்ளி விழா காவியம்.இந்த படத்தைப் பார்த்த தலைவர் ரஜினிகாந்த் உடனடியாக கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ள சிறப்பம்சம், "நீ நடிகனின் நடிகன்".

அன்பே சிவம்.

தொழிலாளர்களுக்காகப் போராடும் நல்லசிவம் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்து இருப்பர்.கம்ப்யூனிசத்தின் உண்மையான கருத்துக்களை சராசரி மனிதருக்கும் சரியாக புரிய வைத்த படம் இது. பொதுவாக கமல் படத்தில் உள்ள குறை என்னவென்றால் அவர் மட்டுமே நடித்து,அவருக்கே புரிந்த சில பகுத்தறிவான விசயங்களை பேசி நம்மை கொள்வார்.ஆனால் இந்த படம் சற்று மாறுபட்டது இதில் ஏற்ற எல்லா கதை பாத்திரமும் நன்றாக நடித்து இருப்பார்கள்.

மகாநதி

மகன்,மகளுடன் சந்தோஷ வாழ்க்கை  வாழும் கிருஷ்ணாவாக
கமல்.அதித ஆசையால் சென்னை வந்து அவர் வாழ்க்கை
சீரழியும் கதைதான் மகாநதி.
இந்த படத்தில் எந்தகாட்சியை குறைசொல்லுவது?சொல்லவே இயலாத ஒன்று. விபசாரம் செய்பவர்கள் எல்லாம் அந்த தொழிலைவிரும்பி செய்யவில்லை என்றும் யாரோ ஒருவரால் தான் அங்கே தள்ளப்பட்டு விடுகின்றனர் என்ற உண்மையையும் உணர்த்திய படம்.ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் ஒரு கெட்டவனுக்கு கிடைச்சிடுதே ஏன்?என்றவசனம்தான்படத்தின் மைய கரு என்றே சொல்லுவேன் நான்.தான் பெரிய மனுஷியான செய்தி சொல்லி சிறையிலிருக்கும் கமலிடம்"மகள் (ஷோபனா) காலில் விழும் காட்சிலும் , அதே மகளை விபசார விடுதியில் இருந்து மீட்டு வந்த பிறகு, இரவில் அந்த பெண் உளறும் வசனத்தை கேட்டு அழும் கமலுடன் சேர்ந்து நானும்
அழுத படம்.

ஆபூர்வ சகோதர்கள்
தன் தந்தையை கொன்றவர்களை மகன் பழிவாங்கும் சாதாரண கதை தான்.கதைகாக இவர் மேற்கொண்ட சிரத்தை என்வென்று சொல்லுவது தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத முயற்சி ஒன்றை இந்த படத்தில் செய்து இருப்பார்,அது குள்ள வேடம்,திரைகதையின் வேகமும் இசைஞாநியின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம்

என்றும் அன்புடன






















புதன், ஜூலை 20, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நீ மட்டும் எனக்கு கிடைத்து இருக்காவிட்டால்
வாழ்கை என்னவென்று அறியாமலேயே
என் ஆயுள் முடிந்து இருக்கும்....

பல முறை எரிந்து விழுந்து இருக்கின்றேன் உன் மேல்
ஒரு முறை கூட கோப பார்வை பார்த்தது இல்லை நீ.....

ஆழம் விழுதுகள் போல ஆயிரம் உறவுகள் இருந்தும்
என் வேரென நீ இருப்பதால் தான் நான் இன்னும்
வீழ்ந்து விடாமல் இருக்கின்றேன்....

இப்பிறப்பில் ஈர்ப்பில்லை
அடுத்த பிறவியில் ஆர்வமில்லை
அப்படியும் பிறந்திட்டால்
அமுதாவென இனிக்கும் தமிழ் மொழியில்
எனக்கென நீ இயற்றும் கவிதைகளுக்கு
அரசனாகி உன் ஆளுமைக்கு அடிமையாவேன்....

இன்று பிறந்தநாள் (20-07-11) காணும் அன்பு மனைவிக்கு...
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..........

 அன்புடன்.................

செவ்வாய், ஜூலை 12, 2011

தலைவா வருக! வருக!

.வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிய வள்ளலே வருக

.இறைவன் அருளால் நோயை வென்று தாயகம்
திரும்பும் அன்புதலைவா வருக வருக..

.தன்னடக்கத்தின் தலைமகனே வருக வருக..

.உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று மனசாட்சிப்படி பேசிய மனித தெய்வமே வருக வருக.


இந்திய சினிமாவின் முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்தியாவைத் தாண்டி உலகம் எங்கும் அவருக்கு ரசிகர்கள் பல கோடி. ஆசிய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர்தான் வரும் புதன்கிழமை இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். இரு மாதங்களுக்கு முன் ராணா படத்தின் துவக்க விழாவன்றுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு என்று ஆரம்பித்தது பிரச்சனை. அவருக்கு
சிறுநீரகக் கோளாறும், நுரையீரலில் நீர்க்கோர்ப்பும் இருப்பது தெரிய வந்தது. நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றினர்.
சென்னையில் மட்டும் தொடர்ந்து 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்ட பிறகு, அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனாலும், அவரது சிறுநீரகங்கள் இயங்கவில்லை.எனவே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு படிப்படியாக அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது.சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி பூரண நலமடைந்தார், கடந்த ஜூன் 14ம் தேதியே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்றார். பூரண ஓய்வெடுத்து வந்தார்

சில தினங்களுக்கு முன் அவரை சோதித்த மருத்துவர்கள், இனி அவர் சென்னை திரும்பலாம். படங்களில் முன்புபோல நடிக்கலாம் என்று கூறினர்.இதனை தொடர்ந்து அவர் நாளை சென்னை வருகிறார்.....


என்றும் அன்புடன்

செவ்வாய், ஜூன் 14, 2011

முடிவு நம்மிடமே இருக்கிறது!




இந்த இரு கதைகளுமே என் நண்பர் எனக்கு மின் அஞ்சலில் அனுப்பியது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.நம்முடைய எல்லாவிதமான ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் முடிவு நம் கைகளிலேயே உள்ளது.


சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

வாழைப்பழமும் வழிப்போக்கர்களும் ...

ஒரு முறை ஒரு நகரத்தின் வழியே ஒரு தமிழன், ஒரு ஆங்கிலேயன், ஒரு வட இந்தியன் , ஒரு சீனாக்காரன் பயணித்துக்கொண்டிருந்தார்கள் , அவர்களுக்கு பசி ஏற்பட்டது , ஆகவே தாங்கள் கொண்டுவந்திருந்த காசுகளை ஒன்றாக போட்டு ஏதாவது பழம் வாங்க முடிவு செய்தனர் , அவர்களுக்கு தங்கள் தாய் மொழி தவிர வேறு ஏதும் தெரியாது ... தமிழன் எனக்கு வாழைப்பழம் தான் வேண்டும் என்றான் , ஆங்கிலேயன் I want banana என்றான் , வட இந்தியன் எனக்கு kēlē(கேளே) வேணும் என்றான், சீனன் எனக்கு Xiāngjiāo(சியஞ்சியோ) வேண்டும் என்றான் , அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் தாங்கள் கேட்ட பழம் தான் வேண்டும் என்று சண்டை இட்டுக்கொண்டனர் . அவ்வழியே வந்த ஒரு பெரியவர் இவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பழக் கடைக்குப் போய் , ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வந்தார், அதைப் பார்த்த தமிழன் இது தான் நான் கேட்ட வாழை என்று ஒன்றை எடுத்துக் கொண்டான் ,ஆங்கிலேயனும் this is banana what I asked என்று ஒன்றை எடுத்துக் கொண்டான், வட இந்தியன் இது தான் நான் கேட்ட பழம் kēlē(கேளே) , என்று ஒன்றை எடுத்துக் கொண்டான் , சீனனும் இது தான் நான் கேட்ட பழம்Xiāngjiāo(சியஞ்சியோ) என்று ஒன்றை எடுத்துக் கொண்டான். அவர்கள் அனைவரும் பின் பயணத்தை தொடர்ந்தனர் .

இப்பிடித்தான் நாமளும் ஒரே கடவுளை பல மதங்களின் வழியாக கரெட்டா தப்பா புரிஞ்சிக்கிட்டு சண்ட போட்டுக்கிட்டே இருக்கோம் ......

முடிவு நம்மிடமே இருக்கிறது!


என்றும் அன்புடன்

திங்கள், ஜூன் 13, 2011

நண்பர்களுக்கு வணக்கம் (நான் வந்துட்டேன்)





நண்பர்களுக்கு வணக்கம்.இடைவிடாத பணி, சொந்த அலுவல்கள் காரணமாக சில மாதம் என்னால் வலைதளத்திற்கு வர முடியவில்லை.இனி தொடர்ந்து வருவேன் எப்போதும் உங்கள்
மேலான ஆதரவை வேண்டி...........

என்றும் அன்புடன்
எஸ்.மகாராஜன்









திங்கள், பிப்ரவரி 21, 2011

மறைந்தும் மறையாத மலேசியா வாசுதேவன்.

                                                    
மலேசியா வாசுதேவன்.தமிழ் சினிமா உலகின் அருமையான குரலுக்கு சொந்தக்காரர் எவ்வளவு கடினமாக பாடலையும் அழகாகப் பாடி அசத்திய திறமைசாலி.  இசைஞானி இளையராஜாதான் மலேசியா வாசுதேவனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கினார், பின்னாளில் நடிகர் திலகம் சிவாஜிக்கும்,தலைவர் ரஜினிக்கு அற்புதமாக பொருந்தி போனது இவரது குரல். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள வள்ளியூர் என்ற இடத்தில் உள்ள பன்னிருஅடி அம்மன் கோவில் கொடை விழாவிற்கு வந்த போது
இவரை நேரில் பார்க்கும் வாய்பு எனக்கு கிட்டியது,அவர் பாடிய பாடல்களில் சில உங்கள் பார்வைக்கு.

ராஜரிஷி.


இந்த பாடலை படத்தில் நாம் பார்க்கும் போது படத்தில்
உள்ள சிவன் வேடத்தில் உள்ளவர் சற்று உடலை சிலிர்ப்பது
போலபடமாக்கி இருப்பார்கள். பாடலை கேட்டால் நமக்கும் நிச்சயம் உடல்சிலிர்க்கும்.அந்த சங்கரனை வேண்டி பாடும் பாடல்..




மாவீரன்

தலைவர் ரஜினி அவர்கள் கட்சி ஆரமித்தால் இந்த
பாடல்தான் நம் கட்சியின் முதல் மாநாடுக்கு ஏற்ற பாடல்
என்று பலமுறை ரசிக மன்ற நண்பர்களோடு நாங்கள் பேசி கொள்வதுஉண்டு. எனக்கு மிகவும் பிடித்த சூப்பர்ஸ்டார்ன் 
புரட்சிகரமான பாடல்.




சின்ன வீடு

மனைவியின் அன்பால் தன் தவறை உணர்ந்த ஒரு கணவனின் குரலாக "'சுனந்தாவுடன்" மலேசியா வாசுதேவன் பாடும் வெள்ளை மனம் உள்ள மச்சான்..



ரஜினி அஞ்சலி…

மலேசியா வாசுதேவன் உடலுக்கு இன்று (21-02-11)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.


நீங்கள் மறைந்தாலும் நீங்கள் பாடிய பாடல்கள் என்றும்
உங்களை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும் .


என்றும் அன்புடன்

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

மணிமொழிகள் !


.தேவைப்பட்டாலொழியக் கோபம் கொள்ளாதே.

.நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு.

.தீமை செய்தவனை மறந்து விடு.

.எதையும் சாதிக்க நிதானம், அற்புதமான ஆயுதம்.

.வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.

.ஆணவமும், அழிவும் இறைட்டைக் குழந்தைகள்.

.அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

.சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்ப்பத்தியாகின்றன.

.தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் இருக்காது.

.இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே.

.நீயாகவே முடிவு செய். நீயாகவே செயல் படு.

.முடிந்தால் நன்மை செய். தீமை செய்யாதே.

.சினிமா-பயன் படுத்த தெரிந்தவனுக்கு அற்புதமான ஆயுதம்.

.சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளிங்கள்.

.நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.

.வாழ்வில் நகைச்சுவை வேண்டும். சிரிக்காதவன் மிருகம்.

.அருங்குறள் 1330-ம் கடலளவு. அதன் முன் உலகம் கடுகளவு.

.வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்.

.எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.

.வாழ்வில் துணிவு வேண்டும்.

.விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையே மதி.

.காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதை கவனத்தில் வை.

.வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.

.திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.

.............கவியரசு கண்ணதாசன்




என்றும் அன்புடன்

ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

வாழ்க்கை சிறப்பாக அமைய

படித்ததில் பிடித்தது..........

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.
அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.




வாழ்க்கையைத் தேடு!

பறவைகள் பறப்பது விடியலைத் தேடி
பறவையாய்ப் பறந்திடு வாழ்க்கையைத் தேடி
சிறகுகள் முளைப்பது பறந்திடத் தானே
சிறகினை வளர்த்திடு விண்ணிலே பறந்திடு

யாரும் சொல்லாத வார்த்தைகள் தேடு
யாரும் செல்லாத வழியினை நாடு
நேரம் தவறாமல் உழைத்திடப் பழகு
பாரம் இல்லாத வாழ்க்கையே உனது

சிலையாய் இருந்தால் அழகாய் இருப்பாய்
சிற்பியா யிருந்தால் சிலையை வடிப்பாய்
சிலையா யிருந்து ஜொலிப்பதைக் காட்டிலும்
சிற்பியா யிருந்து சிலையினைப் படைத்திடு

கனவுகள் என்பது துக்கத்தில் இல்லை
கனவுகள் இருப்பின் தூக்கமும் தொல்லை
கனவுகள் கண்டிடு தூக்கத்தை வென்றிடு
கனவுகள் தானே வாழ்க்கையின் பூஞ்செடி

ஜனனமும் மரணமும் நொடியினில் நிகழ்ந்திடும்
ரணங்களும் பிணங்களும் கடைசியில் அடங்கிடும்
தயக்கமும் மயக்கமும் தினம்தினம் வந்திடும்
எழுச்சியும் மலர்ச்சியும் வாழ்க்கையைத் தந்திடும்

- காகிதன்




வியாழன், பிப்ரவரி 10, 2011

கணித மேதை ராமானுஜன் (1887-1920)

இது என் நண்பர் எனக்கு மினஞ்சலில் அனுப்பியது.




“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 ! பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”

பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!

ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.

பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney's Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.

பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.

கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.
மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்! அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம்! அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள்! முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்!
ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் ? எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் ?

தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!

ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.

பின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி! ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்!

1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே! ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது! முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது! அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை! அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன!

1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை! நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை! தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.

ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்! ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது கால் பந்தளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது!

.................(சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada)..

என்றும் அன்புடன்

ஞாயிறு, ஜனவரி 30, 2011

குரல் கொடுப்போம் நம் இனத்துக்காக!!!!!!!!!!!!!







இலங்கையின் கடலோர காவல்படை, தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தாலும், அதை பொறுக்க முடியாமல், அவர்களை அடித்து விரட்டுவது, சித்ரவதை செய்வது, கொல்வது என, இலங்கை அரசு, தங்கள் அன்றாட நடவடிக்கைளை தொடர்கிறது. காரணம், அனாதையாகிவிட்டான் தமிழன் என்ற ஒரு அதீத நம்பிக்கை. கடிதம் எழுதுவதோடு, தமிழக அரசு நிறுத்திக் கொள்ளும்; எச்சரிக்கை விடுவதோடு மத்திய அரசு முடித்துக் கொள்ளும்.இதை நன்கு உணர்ந்து விட்ட இலங்கை அரசும், இலங்கை கடலோர படையும், தங்கள் அஸ்திரங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன. வல்லரசு நாடாக உருவாகிவரும் இந்திய அரசுக்கு, இதை தட்டி கேட்க கூட திராணியில்லை. சொந்த மண்ணில் தமிழர்கள் செத்து மடிவதை ரசித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, கேட்க தைரியமில்லை.

 இனியும் இது போல் நடைபெறாமல் இருக்க ஏதோ
ஒருவகையில் நம் ஆதரவை அவர்களுக்கு வழங்குவோம்

நம் போடும் சத்தம் சென்றடைய http://www.savetnfisherman.org/
தளத்தில் நம் ஆதரவை தெரிவிப்போம்
இணைய தள முகவரி : http://savetnfisherman.org/

ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman

பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman ,
http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html?


நண்பர் வைகை அவர்களின் "'உண்மை சுடும்"" கடிதம்
உங்கள் பார்வைக்கு
http://unmai-sudum.blogspot.com/2011/01/blog-post_29.html



நன்றி பாரத்... பாரதி...(http://bharathbharathi.blogspot.com/)


என்றும் அன்புடன்
 

புதன், ஜனவரி 19, 2011

பொன் மொழிகள்


1. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கௌரவம்
    இல்லாமல் செத்து போவான்

2. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது,
    மனதில் ஈரமும் வேண்டும்

3. அணைய போகிற தீபத்திற்கு ஓளி அதிகம்

4. வறுமையில் நிறை காண்பவனே சிறந்த பணக்காரன்

5. வாழ்வில் நம்பிக்கை நல்லது தான். ஆனால
   அதற்கும் எல்லை உண்டு

6. கடன் இல்லாதவனே பணக்காரன்,
    உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்

7. புத்திசாலிகள் எப்போதுமே எண்ணிக்கையில் குறைவு தான்

8. நேர் வழியில் அடைய முடியாததை
    ஒருபோதும் குறுக்கு வழியில்  அடைய முடியாது

9.  வாக்குறுதி என்பதும் ஒரு வகை கடன் தான்

10. தெரியாது என்று உணருவது அறிவை
      அடைவதற்கு ஒரு வழி

11. நமக்கு தீமை செய்பவர்களுக்கும் நாம் நன்மையே செய்யவேண்டும்

12. இறைவனை அண்டியவர்களுக்கு பிறவி துன்பம் என்றும் இல்லை.

எப்போதும் மகிழ்ந்திருக்க

1.   அமைதி, ஆனந்தம், துணிவு,ஊக்கம், நம்பிக்கை, நல்வாழ்வு,
      இவை பற்றியே நினைவுகள் உள்ளத்தில் இருக்கட்டும்

2.   நம் நிறைவன்புகளை நினைத்து மகிழ்வோம்
      இல்லாமையை எண்ணி வருந்தவேண்டாம்

3.  மற்றவர்களை போல் ஆக ஆசைபடுவது ஆபத்து நம்மை
     நாமே அடையாளம் கண்டு திருப்தி அடைவோம்

4.  நம் கையில் உள்ளவற்றை கொண்டு நல்லது செய்ய பழகுவோம் .

5.  நாம் விரும்பாத மனிதர்களை பற்றிய நினைவில்
     ஒரு விநாடி கூட  வீணாக்க வேண்டாம்

6.  மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் முயற்சியில்
     நாம் நம் துயரத்தை மறப்போம்




அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌

வாழ்த்துக்க‌ளோடு!


வியாழன், ஜனவரி 06, 2011

நினைவலைகள் 2010

ஒரு வருட நிகழ்வுகள்


முதலில் நண்பர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.

வலையுலகிற்கு வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகின்றது.
கடந்த ஆண்டு இதே நாளில் தான் வலைபதிவு தொடங்கினேன்.

2010 - எனக்களித்த சந்தோசங்கள்...

1. நிறைய எண்ணங்களை எழுத கொடுத்தது வலைபதிவின் முலமாக.

2. முகம் தெரியா நண்பர்களை கொடுத்தது வலைபதிவின் முலமாக

3. பதின்ம வயதின் நண்பனை மீட்டு கொடுத்தது ( நன்றி சித்ராஅக்கா)

4. தங்கையின் குழந்தை (சஞ்சய்)

5. ஒரு புதிய உறவினை என்னுடைய திருமணத்தின் மூலம்,
   என்  வாழ்வின் சரிப்பாதியை என்னுடன் இணைத்து கொண்ட
   என்னவளை தந்தது.

6. சில நினைவுகள் பூக்கும் தருணங்களும், நினைத்து வருந்தும்  நிகழ்வுகளும் நடந்த கடந்த ஆண்டு ஒரு படிப்பினையை விட்டுச் சென்றுள்ளது. இந்தப் படிப்பினை வரும் ஆண்டுகளின் நிகழ்வுகளை
எதிர் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன்


என்றும் அன்புடன்